2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே 81, ரவீந்திர ஜடேஜா 58 ரன்கள் சேர்த்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 4, கேப்ரியல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 48, கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 39 ரன்கள் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்நிலையில், 75 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 51 ரன்களுடனும், துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதன்மூலம் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.