உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய் பிரணீத்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.
வெற்றி மகிழ்ச்சியில் சாய் பிரணீத், பி.வி. சிந்து.
வெற்றி மகிழ்ச்சியில் சாய் பிரணீத், பி.வி. சிந்து.


உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. இப்போட்டியில் தனது 5-ஆவது பதக்கத்தையும் உறுதி செய்தார் அவர்.
ஆடவர் பிரிவில் சாய் பிரணீத்தும் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 36 ஆண்டுகள் கழித்து உலகப் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை சீன தைபேயின் டை ஸ யிங்குடன் மோதினார் 5-ஆம் நிலை வீராங்கனை சிந்து.
முதல் கேமை 12-21 என்ற புள்ளிக் கணக்கில் டைசூ எளிதாக வென்ற நிலையில், அடுத்த இரண்டு கேம்களை 23-21, 21-19 என போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் சிந்து.
24 வயதான சிந்து இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் தனது 5-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் சிந்து. சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் சீனாவின் சென் யுபெய்-டென்மார்க்கின் மியா லிச்பெல்ட் ஆகியோர் ஆட்டத்தில் வெல்பவருடன் மோதுவார் சிந்து. உலக சாம்பியன் போட்டியில் 5 பதக்கங்களை வென்றதின் மூலம் ஸாங் நிங்கின் சாதனையை சமன் செய்தார் சிந்து.
அரையிறுதியில் சாய் பிரணீத்: ஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 24-22, 21-14 என்ற கேம் கணக்கில் ஆசிய சாம்பியன் இந்தோனேஷியாவின் ஜோனத்தான் கிறிஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த 1983- உலகக்கோப்பை போட்டியில் பிரகாஷ் பதுகோன் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். அதன்பின் 36 ஆண்டுகள் கழித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தையும் உறுதி செய்தார் சாய் பிரணீத்.
சாய்னா நெவால் தோல்வி: மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால் 21-15, 25-27, 12-21 என்ற கணக்கில் டென்மார்க்கின் மியாவிடம் 1 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியுற்று வெளியேறினார்.
தனது காலிறுதி ஆட்டத்தில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என சாய்னா கண்டனம் தெரிவித்தார்.  சாய்னாவுக்கு கிடைக்க வேண்டிய 2 புள்ளிகளை ரத்து செய்து நடுவர் செயல்பட்டது மோசமான செயல்பாடு என அவரது கணவரான காஷ்யபும் சாடினார்.
சாய்னா ஆடிய மைதானத்தில் நேரடி ஒளிபரப்பு இல்லாததால், முறையீடு செய்யவும் வாய்ப்பு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com