பயங்கரவாத மிரட்டல் எதிரொலியாக மே.இ.தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வ இ-மெயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த செய்தியில் இந்திய அணி கண்டிப்பாக தாக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
பிசிபி உடனே அந்த இ-மெயிலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசிக்கு அனுப்பியது.
எந்த பயங்கரவாத அமைப்பு மிரட்டியது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த செய்தி, பிசிசிஐக்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்படுவர் என இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி கூறுகையில்: மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மும்பை காவல்துறையும் இப்பிரச்னை தொடர்பாக இந்திய தூதரகத்திடம் விளக்கியுள்ளது.
மேலும் அணி வீரர்களுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இந்திய அணிக்கு வந்த இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.