சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
கிரிக்கெட்டின் 3 வகையான ஆட்டங்களிலும் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் விராட் கோலி.
கடந்த 2008-ஆம் ஆண்டு இதே நாளில் (19-8-19) இளம் வீரராக இந்திய அணி சார்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
தனது 11 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கோலி கூறியதாவது:
கடவுளின் அருள் இல்லையென்றால் இத்தகைய நிலை குறித்து நான் கனவு கூட கண்டிருக்க முடியாது. உரிய மன வலிமை, உடல் தகுதி போன்றவற்றுடன் எனது கனவை நிறைவேற்ற சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறேன் என தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக 2008-இல் அறிமுகமான முதல் படம், மற்றும் தற்போது மே.இ.தீவுகளில் அணி தங்கியுள்ள ஓட்டலில் எடுத்த படங்களை பதிவிட்டுள்ளார் கோலி. கோலியின் நம்பிக்கை, கிரிக்கெட் மீதான ஈடுபாடு, கடமையால் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 10 ஆண்டில் 20,000 ரன்களை குவித்த ஓரே வீரர் என்ற சாதனையை படைத்த கோலி, 68 சர்வதேச சதங்களையும் தனது வசம் கொண்டுள்ளார்.
31 வயதில் நுழைவதற்குள், பல்வேறு பேட்டிங் சாதனைகளை நிகழ்த்தியுள்ள கோலி, அவற்றை எவரும் நீண்ட காலத்துக்கு முறியடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.