இந்தியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 'ஏ' அணி 2-வது நாள் உணவு இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் 'ஏ' அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டம் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார்.
இதையடுத்து, 2-வது நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக தாமதாக தொடங்கியது. இதனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை நேற்றை ஆட்டத்துடன் டிக்ளேர் செய்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் 'ஏ' அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
இஷாந்த் சர்மாவின் மிரட்டல் பந்துவீச்சால் தொடக்க ஆட்டக்காரர் ஜெரமி சொலோஸனோ (9) மற்றும் பிராண்டன் கிங் (4) ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேரன் பிராவோ விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி திணறி வருகிறது.
இதன்மூலம், 2-வது நாள் உணவு இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் 'ஏ' அணி 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் காவெம் ஹாட்ஜ் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.