தாரமங்கலம் அருகே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட தாரமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட துட்டம்பட்டி கிராமத்தில் உள்ள அருவங்காடையைச் சேர்ந்தவர் கணேசன். லாரி ஓட்டுநராகப் பணியாற்றிவந்த இவர் தற்போது தேநீர்க் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காந்தாமணி ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.
இவர்களுக்கு கவிதா, கண்ணன், பெரியசாமி (25), ராம், உமாராணி ஆகிய 5 பிள்ளைகள். இவர்களில் மூன்றாவது மகன் பெரியசாமி, ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். ஆடு மேய்ப்பது முதல் நெசவு, நூல் மில் வேலை வரை பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவர், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜுடன் சேர்ந்து விளையாடி வந்துள்ளார். இந்தநிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட பெரியசாமிக்கு, ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் மருத்துவ உதவிகளை செய்துகொடுத்துள்ளார். இருவரும் பெரியசாமிக்கு பயிற்சிகளையும் அளித்துவந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் விளையாடி பரிசுகளைப் பெற்ற பெரியசாமிக்கு தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பெரியசாமி தனது சிறப்பான பந்துவீச்சால் எதிரணியினரை திணறடித்தார்.
இறுதிப் போட்டியில் சிறப்பான பந்து வீச்சை கையாண்டு 5 விக்கெட்டுகளை எடுத்ததைத் தொடர்ந்து,சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்அணி கோப்பையை கைப்பற்றியது. சிறந்த தொடர் மற்றும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.