மே 12 ஐபிஎல் 2019 இறுதி ஆட்டம்: சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு இடமாற்றம்

வரும் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் 2019 சீசன் இறுதி ஆட்டத்தை சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு பிசிசிஐ மாற்றியுள்ளது. சென்னை
மே 12 ஐபிஎல் 2019 இறுதி ஆட்டம்: சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு இடமாற்றம்

மூடப்பட்ட 3 கேலரிகளை திறக்க டிஎன்சிஏ அனுமதி பெறாததால் பிசிசிஐ நடவடிக்கை
வரும் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் 2019 சீசன் இறுதி ஆட்டத்தை சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு பிசிசிஐ மாற்றியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்ட 3 கேலரிகளை திறக்க டிஎன்சிஏ அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2019 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் தற்போது இப்போட்டி பிளே ஆஃப் சுற்று கட்டத்தை எட்டி உள்ளது. வரும் மே 12-ஆம் தேதி இறுதி ஆட்டத்தை சென்னையில் நடத்த பிசிசிஐ முடிவு செய்திருந்தது. எனினும் கேலரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே உள்ளிட்ட 3 கேலரிகள் (12,000 இருக்கைகள்) அமரக்கூடிய வசதி கொண்டவை. இவற்றை திறப்பதற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய அனுமதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் பெற முடியவில்லை. இதுகுறித்து பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தது டிஎன்சிஏ.
விசாகப்பட்டினத்தில் 2 நாக் அவுட் ஆட்டங்கள்: இதுதொடர்பாக பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் திங்கள்கிழமை கூறியதாவது: 
சென்னை அணி லீகில் இரண்டு அணிகளில் முதலிடத்தை பெற்றால், குவாலிபையர்-1 ஆட்டத்தை சொந்த மைதானத்திலேயே ஆடும் வாய்ப்புள்ளது. எனினும் எலிமினேட்டர் (மே 8), குவாலிபையர்-2 (மே 10) ஆட்டங்கள் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
கேலரிகளை திறக்க அனுமதி கிடைக்கவில்லை என டிஎன்சிஏ கூறியுள்ளதால், சில ஆட்டங்களை ஹைதராபாதுக்கு மாற்றி உள்ளோம்.
நாக் அவுட் ஆட்டங்களில் நுழைவுச் சீட்டு விற்பனை என்பது பிசிசிஐயின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் விசாகப்பட்டினத்தில் 2 நாக் அவுட் ஆட்டங்களை நடத்த உள்ளோம்.
3 கேலரிகள் திறக்காவிட்டால், பிசிசிஐக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். கடந்த 2012-இல் இருந்து கேலரிகள் மூடப்பட்டுள்ளன. 
ஏன் குவாலிபையர்-1 மற்றும் இறுதி ஆட்டம் சென்னைக்கு முதலில் ஒதுக்கப்பட்டது எனக் கேட்டபோது ராய் கூறியதாவது:
நடப்பு சாம்பியனாக சென்னை உள்ளதால், இந்த ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் முதலிடத்தை பிடித்தால் ஒரு ஆட்டம் சென்னையில் நடைபெறும். ஹைதராபாதில் இறுதி ஆட்டம் மட்டுமே நடைபெறும். அங்கு மே 6, 8, 10 தேதிகளில் பொதுத் தேர்தல் நடப்பதால், எலிமினேட்டர், குவாலிபையர் ஆட்டம் நடைபெறவில்லை.
மகளிர் மினி ஐபிஎல்: மேலும் ஜெய்ப்பூரில் மே 6 முதல் 10 வரை மகளிர் மினி ஐபிஎல் போட்டி நடைபெறும். இதில் டிரெய்பிளேஸர்ஸ், சூப்பர்நோவாஸ் அணிகளுடன் புதிதாக வெலாசிட்டி என்ற அணியும் இடம்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com