டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஒற்றையர் அரையிறுதியில் தோற்ற ஜோகோவிச், காயம் காரணமாக கலப்பு இரட்டையர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்-ஐ எதிர்கொண்டார் செர்பியாவின் ஜோகோவிச். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றால் ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள், ஒலிம்பிக் தங்கம் என்கிற கோல்டன் ஸ்லாம் பெருமையை அடைய ஜோகோவிச் எண்ணினார். இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று பட்டங்களையும் ஜோகோவிச் வென்றுள்ளார். ஆனால் 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்.
இதையும் படிக்க | டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பி.வி. சிந்து தோல்வி
பிறகு ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயினின் கரேனோ பஸ்டாவிடம் தோற்றார் ஜோகோவிச். அடுத்ததாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நினாவுடன் இணைந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ் பார்டி - ஜான் பீர்ஸ் இணையை எதிர்த்து ஜோகோவிச் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆட்டத்திலிருந்து ஜோகோவிச் விலகியுள்ளார்.
டோக்கியோவில் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச், தற்போது எவ்விதப் பதக்கமும் இன்றி திரும்பிச் செல்கிறார்.