பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டும் தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி திறமையை நிரூபித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் ஓவர் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பையும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூர் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த ஆட்டத்தில் 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டும் தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி திறமையை நிரூபித்துள்ளார். அவர் பந்துவீச்சில் மும்பை அணி வீரர்களால் ஒரு பவுண்டரியும் எடுக்க முடியவில்லை. 20 வயது வாஷிங்டன், 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பவர்பிளேயில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஆர்சிபி அணியின் வெற்றியில் முக்கியப் பங்களித்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி சார்பில் 6 வீரர்களும் பெங்களூர் அணி சார்பில் 5 வீரர்களும் பந்துவீசியதில் வாஷிங்டன் மட்டுமே ஒரு பவுண்டரியும் கொடுக்காத வீரர். மேலும் இதே ஆட்டத்தில் வாஷிங்டனும் மும்பை வீரர் ராகுல் சஹாரும் மட்டுமே சிக்ஸர்களை வழங்கவில்லை.
இந்த வருட ஐபிஎல் ஆட்டத்தில் நேற்றுதான் முதல்முறையாக பவர்பிளேயில் பந்துவீசியுள்ளார் வாஷிங்டன். மேலும் ஆர்சிபி அணிக்காக விளையாடியதிலிருந்து மொத்தமாகவே 7 ஓவர்கள் மட்டுமே பவர்பிளேயில் பந்துவீசியுள்ளார். சராசரியாக 12.3 ரன்கள் ஒரு ஓவருக்கு வழங்கியதால் கோலிக்கு இவர் மீது நம்பிக்கை வரவில்லை. இதனால் குறைவாகவே பவர்பிளேயில் அவரைப் பயன்படுத்தியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் பவர்பிளேயில் அசத்தியிருப்பதால் இனிமேல் ஆர்சிபி ஆட்டங்களில் பவர்பிளேயில் அடிக்கடி வாஷிங்டன் பந்துவீசுவார் என எதிர்பார்க்கலாம்.