மைதானத்தின் அளவுக்கேற்ப சூப்பர் ஓவரில் திட்டமிட்டு விளையாடியதாக ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டும் தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி திறமையை நிரூபித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் ஓவர் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பையும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூர் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வென்றது.
துபை மைதானத்தின் பவுண்டரி அளவுகள் வித்தியாசமாக உள்ளதால் அதற்கேற்றபடி திட்டமிட்டுள்ளது ஆர்சிபி அணி. ஸ்கொயர் பவுண்டரி ஒரு பக்கம் 82 மீட்டராகவும் இன்னொரு பக்கம் 68 மீட்டராகவும் உள்ளதால் சிக்ஸர்கள் அடிக்க பேட்ஸ்மேன்கள் சிலசமயம் தடுமாறியுள்ளார்கள். சூப்பர் ஓவரில் இரு அணி வீரர்களாலும் சிக்ஸர் அடிக்க முடியவில்லை. மும்பை அணி ஒரு பவுண்டரியும் ஆர்சிபி அணி இரு பவுண்டரிகளும் அடித்தார்கள்.
முதலில் கோலி விளையாடியபோது 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும் சூப்பர் ஓவரில் அவரும் டி வில்லியர்ஸூம் களமிறங்கினார்கள். இதற்கான காரணமாக கோலி கூறியதாவது:
மைதானத்தின் அசாதாரணமான பவுண்டரி அளவுகளைக் கொண்டு சூப்பர் ஓவர் பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்தோம். பெரிய பவுண்டரிகள் பக்கம் பும்ரா ஓவரை வீசியதால் இரண்டு ரன்களை ஓடி எடுக்கும் வீரர்கள் தேவை. இதனால் தான் நானும் டி வில்லியர்ஸும் களமிறங்கினோம் என்றார்.