விராட் கோலியும் மனிதர்தான் என்பதை மக்கள் மறக்கின்றனர் என அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலிரண்டு ஆட்டங்களில் சோபிக்கத் தவறினார். குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுலின் இரண்டு கேட்ச்சை தவறவிட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதனால், கோலியின் செயல்பாடு குறித்து விமரிசனங்கள் எழத் தொடங்கின.
இந்த நிலையில், கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் இது ஒரு அங்கம்தான். களத்தில் சிறப்பான நாள்களும் உண்டு, மோசமான நாள்களும் உண்டு. கோலி தனது செயல்பாட்டால் மிகப் பெரிய அளவுகோலை நிர்ணயித்து வைத்துள்ளார். அதனாலே, சில நேரம் அவரும் மனிதர்தான் என்பதை மக்கள் மறக்கின்றனர். அவர் இயந்திரம் அல்ல.
ஒவ்வொரு முறை களத்துக்குச் செல்லும்போதும் வெற்றி பெற முடியாது. கோலி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதை ரசிகர்கள் பார்த்துப் பழகிவிட்டதால், அவர் ஒரு இன்னிங்ஸில் நன்றாக விளையாடாததுகூட அவரது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது."