மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்றிருந்த மும்பை இந்தியன்ஸ், இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
கொல்கத்தா அணியின் ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பேட்டிங்கில் மிகவும் சுமாராகவே விளையாடியது. இதுபற்றி கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
பேட்டிங், பந்துவீச்சில் இன்னும் நாங்கள் நன்றாக விளையாட வேண்டியிருக்கிறது. முதல் ஆட்டத்தில் சுமாராகவே ஆடியிருக்கிறோம். தோல்வியை மிகவும் ஆராய விரும்பவில்லை. எங்குத் தவறு செய்தோம் என வீரர்களுக்குப் புரிந்துள்ளது.
பேட் கம்மின்ஸ், மார்கன் ஆகிய இருவரும் இன்றுதான் தனிமைப்படுத்துதலை முடித்துள்ளார்கள். இந்த வெயிலில் இந்தச் சூழலில் விளையாடுவது கடினமானது. எங்கள் வீரர்கள் நன்கு முயற்சி செய்தார்கள். பேட்டிங் வரிசையை மாற்றுவது குறித்து பயிற்சியாளர் மெக்கல்லமுடன் விவாதிக்கவில்லை என்றார்.