சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து புதிய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி வீழ்த்தியது. துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 19.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ரன்களே எடுத்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின்போது சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயமடைந்தார். கடந்த வருட ஏலத்தில் மிட்செல் மார்ஷை ரூ. 2 கோடிக்கு ஹைதராபாத் அணி தேர்வு செய்தது.
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்தார் மிட்செல் மார்ஷ். பிறகு ஆட்டத்தின் கடைசித் தருணத்தில் பேட்டிங் செய்ய வந்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். 2017-ம் ஆண்டிலும் புணே அணிக்காகத் தேர்வானபோது காயம் காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறினார்.
மார்ஷுக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.