சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.
துபையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத், பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வார்னர் முதலில் பெங்களூருவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
பெங்களூருவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். பின்ச் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்த இளம் படிக்கல் சரவெடிபோல் பவுண்டரிகளாக அடித்தார்.
இதன்மூலம், தனது 36-வது பந்தில் படிக்கல் அரைசத்தை எட்டினார். எனினும், அதற்கு அடுத்த ஓவரிலேயே அவர் விஜய் சங்கர் பந்தில் ஆட்டமிழந்தார். 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த பந்திலேயே பின்ச்சும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் சற்று நிதானம் காட்டி பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், இந்த பாட்னர்ஷிப் அதிரடிக்கு மாறுவதற்கு முன்பாக கோலி 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும், டி வில்லியர்ஸ் பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையளித்து வந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரியும், 2 ரன்களும் எடுக்க 29 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் டி வில்லியர்ஸ். ஐபிஎல் கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸுக்கு இது 34-வது அரைசதமாகும்.
ஆனால், அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற டி வில்லியர்ஸ் 2-வது ரன் எடுக்கும்போது ரன் அவுட் ஆனார். அவர் 30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, கடைசி 3 பந்துகளில் பெங்களூரு அணிக்கு 1 ரன் மட்டுமே கிடைத்தது. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் அணித் தரப்பில் நடராஜன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.