கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தில்லி, பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தில்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.
அந்த அணிக்கு மிகவும் மோசமான தொடக்கம் அமைந்தது. ஷமி வீசிய 2-வது ஓவரில் தவான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, களமிறங்கிய ஹெத்மயர் இதே ஓவரில் பவுண்டரி அடிக்க முயற்சிக்க பஞ்சாப் வீரர் கௌதம் அந்தக் கேட்ச்சை தவறவிடுவார்.
எனினும், அடுத்த ஓவரிலேயே ஷமி தனது சிறப்பான பந்துவீச்சால் பிருத்வி ஷா (5 ரன்கள்), ஹெத்மயர் (7 ரன்கள்) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், அந்த அணி 13 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் நிதானம் காட்டி பாட்னர்ஷிப் அமைத்தனர்.
4-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்த பிறகு, இருவரும் அதிரடிக்கு மாற முயற்சித்தனர். கௌதம் ஓவரில் ஷ்ரேயஸ் 2 இமாலய சிக்ஸர்களை அடித்தார்.
அடுத்ததாக ரவி பிஷ்னாய் ஓவரில் பந்தும் பவுண்டரி அடித்தார். ஆனால், பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே பந்த் (31 ரன்கள்) போல்டானார்.
இதற்கு அடுத்த ஓவரை ஷமி வீச ஷ்ரேயஸும் (39 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
இதனால், அந்த அணி மீண்டும் சிக்கலுக்குள்ளானது. அடுத்து களமிறங்கிய அக்சர் படேலும் 6 ரன்களுக்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ரன்களுக்கும் காட்ரெல் பந்தில் ஆட்டமிழந்தனர்.
ஸ்டாய்னிஸ் அதிரடி:
இதையடுத்து, ஸ்டாய்னிஸ் கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார். கடைசி 3 ஓவர்களை வீசிய ஜார்டன் மற்றும் காட்ரெல் பந்துகளை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசிய அவர் அந்த அணியை 150 ரன்களைக் கடக்கச் செய்தார்.
குறிப்பாக கடைசி ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு அடுத்த 3 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். மீண்டும் அடுத்த பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட 20 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தில்லியும் 150-ஐத் தாண்டியது.
கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்று 2-வது ரன் எடுக்கும்போது ரன் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்தார்.
எனினும், அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கடைசி பந்தை எதிர்கொள்ள புதிய பேட்ஸ்மேனாக நார்ஜே களமிறங்கினார். கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும், பிஷ்னாய் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஸ்டாய்னிஸ் அதிரடியால் தில்லி அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 57 ரன்கள் எடுத்தது. இதில் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்.