தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.
தில்லி பேட்டிங்: பும்ரா, போல்ட் அபார பந்துவீச்சு: 110 ரன்கள் எடுத்த தில்லி அணி!
111 ரன்கள் என்ற எளிய இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். இந்த இணை விக்கெட்டைப் பாதுகாத்து நிதானம் காட்டி விளையாடியது. பவர் பிளேவில் 4 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் தில்லிக்குப் பலனளிக்கவில்லை. பவர் பிளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்தது.
இதே வேகத்துடன் விளையாடி வந்த நிலையில், டி காக் 26 ரன்களுக்கு நோர்க்கியா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, கிஷனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். சூர்யகுமார் பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்புத் தர கிஷன் விளையாடி வந்தார். 37-வது பந்தில் அரைசதத்தை எட்டிய கிஷன், அதிரடிக்கு மாறினார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது ஒரு சிக்ஸர் என பறக்க 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்த மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிஷன் 47 பந்துகளில் 72 ரன்களும், சூர்யகுமார் 11 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளை எட்டியுள்ள மும்பை இந்தியன்ஸ், குவாலிபையர் 1-இல் விளையாடுவதை உறுதி செய்துள்ளது.
தில்லி தொடர்ந்து 4-வது முறையாக தோல்வியடைந்து, கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.