இந்த வருட ஐபிஎல் போட்டி மகத்தான வெற்றியை அடைந்துள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியின் வெற்றி நம்ப முடியாததாக உள்ளது. இதில் எனக்கு ஆச்சர்யமில்லை. ஐபிஎல் போட்டியை கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடத்துவது குறித்து ஸ்டார் தொலைக்காட்சியினரிடமும் மற்றவர்களிடம் விவாதித்தபோது நிறைய கேள்விகளை எதிர்கொண்டோம். போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, இது நடக்குமா நடக்காதா, கரோனா பாதுகாப்பு வளையத்தின் முடிவுகள் என்னவாக இருக்கும், வெற்றிகரமான போட்டியாக இருக்குமா என்றெல்லாம் விவாதித்தோம்.
திட்டமிட்டபடி காரியத்தில் இறங்குவது என முடிவெடுத்தோம். மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையைக் கொண்டு வரவேண்டும், கிரிக்கெட் ஆட்டங்களை மீண்டும் நடத்த வேண்டும் என விரும்பினோம். இப்போது கிடைக்கும் ஆதரவில் எனக்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை. உலகின் மிகச்சிறந்த போட்டி இதுதான்.
இந்தமுறை நிறைய சூப்பர் ஓவர்கள் நடைபெற்றன. ஒரே நாளில் இரு சூப்பர் ஓவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷிகர் தவனின் பேட்டிங், ரோஹித் சர்மாவின் பங்களிப்பு, இளம் வீரர்களின் திறமைகள், ராகுலின் பஞ்சாப் அணியின் விஸ்வரூபம் என எல்லாவற்றையும் பார்த்தோம். ஐபிஎல் போட்டியில் எல்லாமும் கிடைக்கும். ரேட்டிங்குகள், பார்வையாளர்களின் எண்ணிக்கை என இந்த வருடம் ஐபிஎல் போட்டி மகத்தான வெற்றியை அடைந்துள்ளது என்றார்.