தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரைனை 5-வது வீரராக களமிறக்கியது பயிற்சியாளர் மெக்கலத்தின் யோசனை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா, தில்லி அணிகள் மோதின. இதில் நிதிஷ் ராணா (53 பந்துகளில் 81 ரன்கள்), சுனில் நரைன் (32 பந்துகளில் 64 ரன்கள்) மற்றும் வருண் சக்கரவர்த்தியின் (5 விக்கெட்டுகள்) சிறப்பான ஆட்டத்தால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5-வது வீரராக கேப்டன் இயான் மார்கனுக்குப் பதில் சுனில் நரைன் களமிறக்கப்பட்டார்.
இந்த ஆட்டத்துக்குப் பிறகு சுனில் நரைனை 5-வது வீரராக களமிறக்கியது பற்றி மார்கன் கூறியதாவது:
"அது பயிற்சியாளரின் முடிவு. எல்லா புகழும் பிரெண்டன் மெக்கலத்துக்கே சேரும்."
முன்கூட்டியே களமிறக்கப்பட்ட நரைன், ராணாவுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தார்.