சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராகவும், ஆல்ரவுண்டராகவும் இருப்பவர் டுவைன் பிராவோ. இந்நிலையில் தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆரம்பம் முதல் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வரும் சென்னை அணிக்கு பிராவோவின் விலகல் மேலும் சறுக்கலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முதல் மூன்று போட்டிகளில் களமிறக்கப்படாத பிராவோ இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
காயம் காரணமாக தில்லி அணிக்கு எதிரான போட்டியில் பிராவோ இறுதிஓவர் வீச முடியாததால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. தற்போது பிராவோவின் விலகல் சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சுரேஷ் ரெய்னா அதனைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.