ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.
இதில் ஷிகர் தவான் மட்டும் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை தவான் படைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான கடந்த ஆட்டத்திலும் அவர் சதமடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
அதேசமயம், இந்த இன்னிங்ஸில் 5,000 ஐபிஎல் ரன்கள் என்ற மைல்கல்லையும் தவான் எட்டினார். இதன் விளைவு, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தவான் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.
இந்த சீசனில் முதலில் பெரிய ஸ்கோர்களை அடிக்கத் திணறி வந்த தவான், தில்லியின் 7-வது ஆட்டமான மும்பைக்கு எதிராக முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அதன்பிறகு, 57,101, தற்போது 106 என மிகப் பெரிய ஸ்கோர்களைக் குவித்து வருகிறார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தவான் 2-வது இடத்தில் உள்ளார்.