தல என்றால் ஒருவர் மட்டும்தான், அவர் யார் என்று அனைவருக்கும் தெரியும் என பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.
துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆக, 2-ஆவது சூப்பா் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி தற்போது 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆட்டம் பற்றி தனது ட்விட்டரில், மறக்க முடியாத இரவு எனக் குறிப்பிட்டுள்ளார் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல். அதற்குப் பதில் அளித்த ஒருவர், என்னுடைய தல எனக் குறிப்பிட்டு சூப்பர் ஓவரில் கே.எல். ராகுல் செய்த ரன் அவுட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த கே.எல். ராகுல், தல என்றால் ஒருவர் மட்டும்தான், அவர் யார் என்று அனைவருக்கும் தெரியும் என தோனியைக் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார்.