தோனி இல்லாமல் வெற்றிக் கொண்டாட்டம் கிடையாது என்று சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:
வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தோனி இந்தியாவுக்குத் திரும்பும்வரை காத்திருப்போம். தோனி இல்லாமல் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது. சிஎஸ்கே அணியின் கேப்டனிலிருந்து இந்திய அணியின் ஆலோசகராக ஏற்கெனவே அவர் பொறுப்பை மாற்றிக்கொண்டு விட்டார். டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்புவார். அப்போது சிறிய அளவில் வெற்றிக் கொண்டாட்டம் இருக்கும் என்றார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த ஒரு மாதத்துக்கு இந்திய அணியினருடன் இணைந்து செயல்படுவார். போட்டி முடிந்த பிறகே இந்தியாவுக்குத் திரும்புவார்.