ஐபிஎல்

ருதுராஜ் கெயிக்வாட்: சின்ன கல்லு பெரிய லாபம்!

ச. ந. கண்ணன்

ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணியில் எப்போது நிரந்த இடம் பிடிப்பார்? 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனத்தில் ஓடும் கேள்வி இதுதான். 

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 24 வயது ருதுராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அதுவும் பரபரப்பான முறையில்.

நேற்றைய ஆட்டத்தில் ருதுராஜ் 32 ரன்கள் எடுத்தார். இதனால் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கே.எல். ராகுலைத் தாண்டிச் சென்று முதலிடம் பிடித்தார்.

ஆனால் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்தார் டுபிளெஸ்சிஸ். அவர் 86 ரன்கள் எடுத்தபோது ருதுராஜைத் தொட இன்னும் 2 ரன்களே தேவைப்பட்டன. கடைசிப் பந்தை எதிர்கொண்டார் டு பிளெஸ்சிஸ். இதனால் ருதுராஜைத் தாண்டிவிடுவாரோ என்கிற பதற்றம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. முதல் இடத்தைப் பிடித்தால் அது வரலாறாகிவிடும். 2-ம் இடம் யாருக்கு நினைவிருக்கும்? கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார் டு பிளெஸ்சிஸ். இதனால் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து விருது பெற்றார் ருதுராஜ். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். 

இந்த வருடம் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்துள்ளார்  ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள். 

ஐபிஎல் 2020 போட்டியில் முதல் 3 ஆட்டங்களில் 0,5,0 என மோசமாகவே ஆரம்பித்தார். பிறகுதான் தன்னுடைய நிஜத் திறமையை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து மூன்று அரை சதங்கள் அடித்தார். இந்திய அணியில் இடம்பெறாத ஒரு வீரர் ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்தது அதுதான் முதல் தடவை. 6 ஆட்டங்களில் 204 ரன்கள் எடுத்த ருதுராஜ் 3 அரை சதங்கள் எடுத்தார். அப்போதே தோனி எதிர்பார்த்த தீப்பொறி, ருதுராஜிடம் தென்பட்டதால் இந்த வருடம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார்.

2021 ஐபிஎல் போட்டியின் ஆரம்பமும் ருதுராஜுக்குப் பிரமாதமாக அமையவில்லை. 5, 5, 10 என ரன்கள் எடுத்தார். உள்ளே உத்தப்பா வாய்ப்புக்குக் காத்துக்கொண்டிருந்ததால் சிஎஸ்கே அணி என்ன முடிவெடுக்கும் என்கிற ஆவல் ஏற்பட்டது. ஆனால் ருதுராஜுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தார் தோனி. கொல்கத்தாவுக்கு எதிராக 64 ரன்கள் எடுத்தார். ரன் வேட்டை ஆரம்பமானது. 2018 ஐபிஎல் இறுதிச்சுற்றில் சிஎஸ்கேவின் ஷேன் வாட்சன் சதமடித்தார். அதன்பிறகு இந்தப் பருவத்தில் ருதுராஜ், ராஜஸ்தானுக்கு எதிராக அட்டகாசமான சதமடித்தார். அந்தக் கடைசிப் பந்து சிக்ஸரை யாரால் மறக்க முடியும்? வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் தடுமாற்றமில்லாமல் ஆடுகிறார். அதிரடியாக விளையாடும்போதும் நிதானம் தவறுவதில்லை. நடு ஓவர்களில் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்து எதிரணிகளுக்குக் கிலி ஏற்படுத்தி வருகிறார். ருதுராஜ் தொடர்ந்து ரன்கள் குவிப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினார்கள் என்பதே உண்மை. இந்திய இளம் தொடக்க வீரர்களில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை விடவும் மிகத்திறமையானவர் என்கிற நம்பிக்கையை ஐபிஎல் 2021 போட்டியின் முடிவில் பெற்றுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் விளையாடிய 22 ஆட்டங்களிலேயே 7 ஆட்ட நாயகன் விருதுகளை ருதுராஜ் வென்றுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 3 ஆட்டங்களுக்கு ஒருமுறை அந்தப் பட்டத்தைத் தன்வசமாக்கிவிடுகிறார். இதுவும் ஒரு சாதனைதான். இதற்கு முன்பு மைக்கேல் ஹஸ்ஸி, 4.92 ஆட்டங்களுக்கு ஒருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்றார் (59 ஆட்டங்களில் 12 விருதுகள்)

சிஎஸ்கேவுக்குப் பெரிய பலமாக இருந்து கோப்பையை வென்று தந்த ருதுராஜை 2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. சின்ன கல்லு பெரிய லாபம். 

இந்திய அணிக்காக இலங்கையில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ருதுராஜ். ஐபிஎல் 2021 போட்டி முடிந்த பிறகு பல வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களும் சொன்னது, ருதுராஜுக்கு இந்திய அணியில் வளமான எதிர்காலம் உண்டு என்பதுதான். ரோஹித் சர்மா - ருதுராஜ் கூட்டணியை விரைவில் காண்போமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT