ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவிலிருந்து நேராக இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள்.
கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன், சான்ட்னர் ஆகிய நியூசிலாந்து டெஸ்ட் அணி வீரர்களும் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக்கும் இந்தியாவிலிருந்து மே 11 அன்று இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மற்றொரு நியூசிலாந்து வீரரான டிரெண்ட் போல்ட், தனி விமானத்தில் வெள்ளியன்று தில்லியிலிருந்து நியூசிலாந்துச் செல்கிறார். சில வாரங்கள் அங்கிருந்துவிட்டு ஜூன் ஆரம்பத்தில் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார்.