பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிஃப் அலியின் இரண்டு வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமாகியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 அன்று ஆசிஃப் அலி ட்விட்டரில் இவ்வாறு கூறினார். என்னுடைய மகள் நான்காம் நிலை புற்று நோயால் அவதிப்படுகிறார். அவரை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஆசிஃப் அலியின் மகள் காலமாகியுள்ளார்.
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அலிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டபோது அவருடைய பெயர் இடம்பெறவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு அரை சதங்கள் அடித்தார். இதையடுத்து அவர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். இதுவரை அவர் 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ஆசிஃப் அலியின் மகளின் மரணத்துக்கு பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.