நேற்று, இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் மழை பாதிப்பால் கைவிடப்படும் மூன்றாவது ஆட்டம் இதுவாகும். அதே நேரத்தில் இலங்கைக்கு இது 2-ஆவது ஆட்டமாகும்.
இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளார்கள். இனிமேல் இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியா - நியூஸிலாந்து இடையிலான ஆட்டம் நாளை நாட்டிங்கமில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டமும் மழை காரணமாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த சில நாள்களாக அங்கு மழை பெய்து வருவதால் இந்திய, நியூஸிலாந்து வீரர்களால் சரியாகப் பயிற்சியில் ஈடுபட முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. நாளை அங்கு 80% மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுவதால் அந்த ஆட்டமும் மழை பாதிப்பால் கைவிடப்படக் கூடிய சூழலே உள்ளது. இன்று டெளண்டனில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டமும் மழையால் ஓரளவு பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தமுறை உலகக் கோப்பைப் போட்டி நிர்வாகிகளுக்குக் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இனிமேலும் மழையால் எந்த ஆட்டமும் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் மேலும் சில ஆட்டங்களின் முடிவை மழை நிர்ணயிக்கக் கூடிய சூழலே உள்ளது.
நியூஸிலாந்தின் ஃபெர்குசன் இதுபற்றி கூறியதாவது: நாங்கள் விளையாடவே விரும்புகிறோம். இது உலகக் கோப்பை. இந்தியாவை வென்று இரு புள்ளிகள் பெறவே விரும்புகிறோம். மழையால் பாதிக்கப்படும் ஆட்டத்தை யாரும் விரும்பவில்லை. அப்படி நிகழ்ந்தால் அதை நம்மால் தடுக்கமுடியாது. எனினும் இந்தியாவுக்கு எதிராக விளையாடவே விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.