இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றதில் புதிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.
கடைசி ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை மார்டின் கப்தில் ஃபீல்டிங் செய்தார். அதில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார் ஸ்டோக்ஸ். அவர் இரண்டாவது ரன்னை ஓடி முடிக்கும்போது கப்தில் வீசிய த்ரோ ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பந்து, எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 6 ஓவர் த்ரோ ரன்கள் வழங்கப்பட்டன (பவுண்டரி 4 + ஓடியதற்கு 2 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதற்கு முன்பு 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தது. அந்த 6 ஓவர் த்ரோ ரன்களுக்குப் பிறகு 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என நிலைமை அடியோடு மாறியது. இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிச்சுற்றை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த 6 ஓவர் த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன.
ஆனால் ஐசிசி விதிமுறையின்படி இதுபோல ஆறு ஓவர் த்ரோ ரன்கள் வழங்கியது தவறு என்று கூறப்படுகிறது. ஸ்டோக்ஸ், இரண்டாவது ரன்னை எடுக்கும்போதுதான் அது ஓவர் த்ரோவாக மாறியது. அப்போது கப்தில் த்ரோவை வீசத் தொடங்கிய தருணத்தில் இரு பேட்ஸ்மேன்களும் ஒருவரையொருவர் தாண்டவில்லை. இருவருமே எதிர் எதிர் கிரீஸ்களில் இருந்து இரண்டாவது ரன் எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். இந்த நிலையில் 2-வது ரன்னை நடுவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது. ஆனால் அதையும் கணக்கில் கொண்டு 6 ரன்களாக வழங்கியதுதான் ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு 5 ஓவர் த்ரோ ரன்கள் மட்டுமே வழங்கியிருக்கவேண்டும் என்று முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
இது தவறு. முடிவெடுப்பதில் நேர்ந்த தவறு.
எனினும் அந்தப் பரப்பான கட்டத்தில் ஃபீல்டர் த்ரோ வீச முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்திருப்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார். ஆனால் டிவி ரீப்ளேக்கள் வேறொரு காட்சியைக் காண்பித்துள்ளன. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அடில் ரஷித் தான் 5-வது பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும். எனினும் இந்தத் தவறால் தான் நியூஸிலாந்து தோற்றது, இங்கிலாந்து வென்றது எனக் கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.