இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 55 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, மேத்யூஸ் உடன் இணைந்தார் திரிமானே. இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனால், அந்த அணி விக்கெட்டையும் இழக்கவில்லை, ரன் ரேட்டையும் 4.5 ஆக கடைபிடித்து வந்தது. இருவரும அரைசதம் அடித்தனர். இருவரும் நல்ல நிலையில் விளையாடி வந்த நேரத்தில் திரிமானே 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது.
அதன்பிறகு, டி சில்வா துரிதமாக ரன் சேர்க்க திணறினாலும், மேத்யூஸ் ரன் வேகத்தை படிப்படியாக அதிகரித்து சதத்தை எட்டினார். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 113 ரன்கள் எடுத்திருந்த மேத்யூஸ் 49-வது ஓவரில் பூம்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பெரேரா 2 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில், பூம்ரா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, பாண்டியா, குல்தீப், புவனேஷ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.