பியூனஸ் அயர்ஸ்: எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீன அணியும் சனிக்கிழமை விளையாடுகின்றன.
இந்திய அணி சர்வதேச அளவிலான ஆட்டத்தில் களம் காண்பது கடந்த சுமார் ஓராண்டில் இது முதல் முறையாகும். இதற்கு முன் இதே எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் சந்தித்திருந்தது இந்தியா.
அதன் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு ஜெர்மனி மற்றும் பிரிட்டன் அணிகளுக்கு எதிராக விளையாடிய இந்தியா, அதில் 2 ஆட்டங்களில் வென்றதுடன், 2 ஆட்டங்களை டிரா செய்தது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கிவரும் நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான இந்த ஆட்டம் இந்தியா தனது நிலையை அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பாக உள்ளது. முன்னதாக நடைபெற்ற இரு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா ஒரு ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்த, மற்றொரு ஆட்டத்தை அந்த அணி டிரா செய்தது. அந்த ஆட்டங்களில் முன்கள வீரர்களான மன்தீப் சிங், நீலகண்ட சர்மா, தில்பிரீத் சிங் ஆகியோர் அருமையான கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.
எனினும், தடுப்பாட்டத்தில் இந்தியா இன்னும் வலு கூட்ட வேண்டும் என்று எண்ணுவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் கூறியிருந்தார்.
இந்த ஆட்டத்தில் அந்தக் குறையை இந்திய அணி சரி செய்துகொள்ளும் என நம்பலாம். பயிற்சி ஆட்டங்களில் ஆர்ஜென்டீனா சற்று சளைத்திருந்தாலும், இந்த பிரதான ஆட்டங்களில் இந்தியாவுக்கு கடுமையான சவால் அளிக்கும் என்று தெரிகிறது.
எஃப்ஐஹெச் ஹாக்கி லீக் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, 6 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வியை பதிவு செய்ததுடன், 2 ஆட்டங்களை டிரா செய்துள்ளது.
பட்டியலில் பெல்ஜியம் (32 புள்ளிகள்), ஜெர்மனி (19), நெதர்லாந்து (18), ஆஸ்திரேலியா (14) ஆகிய அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.