கரோனா தொற்று காரணமாக நியூசிலாந்தில் 2021 ஜனவரி மாதம் நடைபெற இருந்த உலக இளையோர் பூப்பந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பூப்பந்து கூட்டமைப்பு வியாழக்கிழமை அறிவித்தது.
அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.
அந்த வரிசையில் நியூசிலாந்தில் 2021 ஜனவரி மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த உலக இளையோர் பூப்பந்து 2020 போட்டி கரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக 2024 உலக இளையோர் பூப்பந்து போட்டியை நடத்தும் நியூசிலாந்தின் முன்மொழிவை உலக பூப்பந்து கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக நியூசிலாந்து பூப்பந்து தலைமை நிர்வாகி ஜோ ஹிட்ச்காக் தெரிவித்துள்ளார். "இந்த செய்தி குறித்து நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக இதுதான் சரியான முடிவு." என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 11 வரை நடைபெற இருந்த போட்டி கரோனா தொற்று காரணமாக 2021 ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.