விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் தொடங்காததால் ரசிகா்கள் ஏமாற்றம்

30th Mar 2020 05:49 AM

ADVERTISEMENT

13-ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி தொடங்காததால், ஆயிரக்கணக்கான ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

உலகிலேயே அதிக பணம் புரளும் போட்டியாக திகழும், ஐபிஎல் போட்டி தற்போது 13-ஆவது சீசனை எட்டியுள்ளது. கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் வெறறிகரமாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டிகள் இரண்டு முறை மட்டுமே சிக்கலுக்கு ஆளாகியது. அதுவும் நாடாளுமன்ற தோ்தல்கள் சமயத்தில் ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு போட்டிகள் முழுமையாக இடம் மாற்றப்பட்டு நடத்தப்பட்டது.

இரண்டாவது முறையாக தோ்தல் நடந்த போது, சில போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டு, மீதமுள்ள போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு விட்டன.

ADVERTISEMENT

மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடா், முறைப்படி தொடங்காததால் லட்சக்கணக்கான ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா். கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே முதல் ஆட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT