Specials

மூன்று மாதங்களாக நெட்டி தக்கை தயாரிக்கும் பணியில் ஒட்டுமொத்த கிராமம் 

எம். ஞானவேல்

கொள்ளிடம் அருகே ஒரு ஆண்டில் மூன்று மாதங்களுக்கு நெட்டி தக்கை தயாரிக்கும் பணியில் ஒட்டுமொத்த கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியைசேர்ந்த மேல வல்லம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 80 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அத்தனை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் நெட்டி தக்கை தயாரிக்கும் தொழிலில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லால்பேட்டை, குறிஞ்சிப்பாடி மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நலைகளில் படர்ந்து வளர்ந்து கிடைக்கின்ற நெட்டி செடிகளை நீர் நிலைகளில் இறங்கி அவைகளை பக்குவமாக எடுத்து சேகரித்து மினி ஆட்டோ மூலம் மேலவெள்ளம் கிராமத்துக்கு எடுத்து வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் இங்குள்ள ஆண்கள் சுமார் பதினைந்து அல்லது இருபது பேர் நெட்டி தக்கை செடிகளை சேகரித்து எடுத்து வருவதற்கு கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரி மற்றும் பாண்டிச்சேரி குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளுக்கு சென்று சேகரித்து வருகின்றனர். 

இந்த நெட்டி செடிகளின் தண்டு மேல் பகுதியில் உள்ள தோல் முதலில் சிவபடுகிறது. பின்பு காய வைக்கப்படுகிறது.பின்பு துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. தேவையான அளவு வடிவத்துக்கு தக்கவாறு வெட்டப்படுகிறது. காயவைக்கப்பட்ட பின்பு உடனடியாக மஞ்சள், நீலம், சிவப்பு உள்ளிட்ட தேவையான நிறங்களில் சாயம் கொடுக்கப்பட்டு மீண்டும் காய வைக்கப்படுகிறது. 

இரண்டே நாளில் இந்த தக்கைகள் காய்ந்து விடுகின்றன. இந்த தக்கைகளை மாலையாக கோர்க்கும் வகையில் கடலோர கிராமங்களுக்குச் சென்று கத்தாழை செடி எடுத்துவந்து அதிலிருந்து நாரெடுத்து அந்த நாரில் நெட்டி தக்கைகளை கோர்த்து, ஒவ்வொரு மாலையிலும் பூ போன்ற குஞ்சம் செய்து அதனுடன் சேர்த்துகட்டி மாலையாக்கி விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கின்றனர். 

அழகாகவும், நேர்த்தியாகவும் இயற்கை முறையில் செய்யப்பட்ட இந்த நெட்டிதக்கை மாலைகள் செய்து முடிப்பதற்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது. இந்த மூன்று மாதங்களில் சுமார் நான்காயிரம் முதல் 5000 மாலைகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த  மாலைகள் செய்யும் பணியில் மேல வல்லம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டு மாலையை தயார் செய்கின்றனர். இப்படி மூன்று மாத காலம் செய்யப்பட்ட அனைத்து மாலைகளும் இங்குள்ள இளைஞர்களும் ஆண்களும் சிதம்பரம், கடலூர், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சைக்கிள்கள் மூலமாக எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு நெட்டி தக்கைமாலையின் விலை ரூ.10 வீதம் விற்பனை செய்கின்றனர். 

மாட்டுப்பொங்கலன்று ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு இந்த இயற்கை முறையிலான நெட்டித்தகைகளை இயற்கை விரும்பிகள் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலங்களில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மாலைகள் மாட்டுப்பொங்கலன்று ஆடு மற்றும் மாடுகளுக்கு பயன்படுத்தி வந்தாலும் சிலர் இந்த வகையான நெட்டிதக்கை மாலைகளைபெரிதும் வாங்கி போற்றி வளர்த்து வரும் கால்நடைகளுக்கு அணிவித்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

வண்ண வண்ண நிறங்கள் வாய்ந்த பிளாஸ்டிக் மாலைகள் வந்ததால் நெட்டி மாலைகள் விற்பனை கடந்த காலங்களில் குறைந்து வருகிறது.இதுகுறித்து மேல வல்லம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறுகையில் நெட்டி தக்கை மாலை எங்கள் கிராமத்தில் மூன்று தலைமுறையாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வருடம் தோறும் இந்த மாலைகள் தயாரிக்கும் பணிக்காக மூன்று மாதங்களை நாங்கள் ஒதுக்கி தயார் செய்து வருகிறோம். இந்த மாலை தயார் செய்வதற்கு நாங்கள் வட்டியுடன் தனியாரிடமிருந்து கடன் வாங்கி மூன்று மாதத்திற்கு பிறகு தயார் செய்த மாலைகளை விற்பனை செய்து வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்தி விடுகிறோம். 

பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட மாலைகள் கால்நடைகள் விழுங்கி விட்டால் அது ஆபத்தானதாக உள்ளது. ஆனால் இந்த இயற்கை முறையில் செய்யப்படும் நெட்டிதக்கை மாலைகளால் எந்த பாதிப்பும் கால்நடைகளுக்கு ஏற்படாது.  இந்த மாலையை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்காவிட்டாலும் பாரம்பரியமாக செய்து வரும் இந்த தொழிலை நாங்கள் தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறோம். 

எங்களுக்கு இந்த வகை மாலைகளை தயார் செய்து விற்பனை செய்து வரும் வகையில் அரசு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க முன்வரவேண்டும். தற்போது கரோனா காலம் என்பதால் நாங்கள் தயார் செய்த மாலைகள் அனைத்தும் விற்பனை ஆகுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வங்கிகளுக்கு சென்று கடன் கேட்கின்ற பொழுது வங்கிகள் கடன் தர மறுத்து வருகின்றன. இந்த கிராம மக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு உதவி செய்ய வேண்டும் மேலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT