விழாக் காலத்தையொட்டி நவீன மின்னணு வண்ண விளக்குகள் ஒளிரும் புதிய வடிவமைப்பில் தயாராகி விற்பனைக்கு வருவதால், இளைய தலைமுறையினரிடையே மீண்டும் வாழ்த்து அட்டைகள் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை, உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகள் கூறி அன்பை பகிர்ந்துகொள்ளப் பெருமளவில் பயன்பட்டு வந்து, வழக்கொழிந்துபோன வாழ்த்து அட்டைகள் மீண்டும் புத்துயிர் பெறுகின்றன.
மகிழ்ச்சியான தருணங்களில் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்வதில் தனி சுகமுண்டு என்றால் இது மிகையல்ல. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை பிறந்தநாள், பொங்கல், புத்தாண்டு, தீபாவளி பண்டிகை தினங்களில், உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்க, அழகிய வாழ்த்து அட்டைகளை தேடிப்பிடித்து வாங்கி, நேரடியாக வாழ்த்துகளை கூறி வழங்குவதும், வெளியூர்களில் வசிப்போர்களுக்கு அஞ்சலில் அனுப்புவதும் வழக்கமாக இருந்தது.
குறிப்பாக, இளைஞர்களும், இளம்பெண்களும் காதலை தெரிவிக்க வாழ்த்து அட்டைகளே பிரதான ஊடகமாக விளங்கியது.
தற்போது செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, கட்செவி மற்றும் சமூக வலைதளங்கள் பயன்பாட்டிற்கு வந்ததால், வாழ்த்து அட்டைகள் வழங்கி அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் மறைந்து போனது. பெரும் வரவேற்பை பெற்றிருந்த வாழ்த்து அட்டைகள் கேட்பாரற்று போயின.
தற்கால இளைஞர்களிடையே அண்மைக்காலமாக பாரம்பரிய உடைகள், உணவு முறைகளுக்கும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வாழ்த்து அட்டைகளும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் வாழ்த்து அட்டைகளில், நவீனத்தை புகுத்தி, மின்னணு வண்ண விளக்குகள் மற்றும் வாழ்த்து கூறும் ரம்மியமான ஒலியெழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்த்து அட்டைகளை வாங்கி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காதலர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்து கொள்வது மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து வாழப்பாடி சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவிகள் சிலர் கூறியதாவது: என்னதான் செல்லிடப்பேசி, சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்துகளை கூறினாலும், நேரில் வாழ்த்து அட்டைகளை வழங்கி அன்பை பகிர்ந்து கொள்வதில் தான் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. தற்கால சந்ததியர் விரும்பும் வகையில், வண்ண விளக்குகளோடு, ரம்மியமான ஒலியெழுப்பும் வகையில் வாழ்த்து அட்டைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு உறவினர்களுக்கும், தோழிகளுக்கும் வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துகளை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர்.