பாடல் 10:
கையினில் உண்பர் கணிகை நோன்ப]ர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே
வியந்தாய் வெள்ளேற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்தார் பெரும் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
விளக்கம்:
கணிகை=போலித் தனம்; கணிகையரின் சொற்களும் செயல்களும் அடுத்தவரை மயக்கும் நோக்கத்துடன் போலித் தன்மை உடையதாக இருக்கும். அது போன்றே புத்தர்கள் அந்நாளில் செய்த நோன்புகளும் போலித் தனம் உடைத்திருந்தது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். செதுமதி=குற்றமுடைய அறிவு;
பொழிப்புரை:
கையினில் உணவினை ஏந்தி உண்ணும் சமணர்களும் போலித்தன்மை உடைய நோன்பினை செய்யும் புத்தர்களும் செய்வன தவம் என்று கருதப்படுவதில்லை; குற்றம் நிறைந்த அறிவினை உடைய அவர்களது பொய்யான சொற்களை பொருட்படுத்தாத மெய்யறிவினை உடைய அடியார்கள் தனது திருவடிகளை தொழுவதை பெரிதும் விரும்பும் பெருமானே, இடபத்தின் தன்மைகளை அறிந்து வியந்து அதனைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமானே, விண்ணவர்கள் தொழும் வண்ணம் உயர்ந்தவனாக விளங்கும் பெருமானே நீ, புகலி நகரில் இருக்கும் உயர்ந்த திருக்கோயிலில் பிராட்டி உடனாக உறைகின்றாய்.