பாடல் 6:
அடை அரிமாவொடு வேங்கையின் தோல்
புடைபட அரை மிசைப் புனைந்தவனே
படை உடை நெடு மதில் பரிசு அழித்த
விடை உடைக் கொடி மல்கு வேதியனே
விகிர்தா பரமா நினை விண்ணவர் தொழப் புகலித்
தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே
விளக்கம்:
அரிமா=சிங்கம்; தகுவாய்=தகுந்த பயன்களைத் தருவாய்; அடை அரிமா=குகையிலே சென்று அடையும் சிங்கம்; சிங்கத்தின் பொதுத் தன்மையாக குகையில் சென்று அடைவது குறிப்பிடப் பட்டாலும், சிங்கம் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நரசிங்கத்தை என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இரணியனது இரத்தம் குடித்த நரசிம்மர், அதனால் வெறி அதிகமாகி திரிந்த போது, நரசிம்மரது ஆவேசத்தை அடக்கி அவரது தோலை சட்டையாக தரித்து அவரின் எலும்பை கதையாக மாற்றிகொண்ட வடுகநாதரின் உருவம் தான் சீர்காழி திருக்கோயிலில் உள்ள சட்டநாதர் உருவம். நரசிம்மரும் இலக்குமியும் வணங்கி வழிபட இறைவன் அவர்களுக்கு அருள் புரிந்ததாக கூறுவர். பணிந்த நரசிம்மரின் அகம் அடங்கியது. இந்த நிகழ்ச்சிகள் சித்திரமாக சீர்காழி கோயிலின் இரண்டாம் நிலையின் சுற்றுச் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. பிரமனின் கர்வமும் பிரளய காலத்தில் பூமி அழிந்துவிட சிவனால் அனைத்தும் தோற்றுவிக்கப்பட்டதால், அழிந்தது. இவ்வாறு அடி பணிந்தவரின் அகங்காரத்தை அடக்கும் மூர்த்தியாக பரமன் இங்கே திகழ்கிறார். சட்டநாதரின் வரலாற்றை விளக்கும் தல புராண செய்யுள் இங்கே தரப்பட்டுள்ளது.
துங்க மாமணி தூணில் வந்து இரணியன் தோள் வலி தனை வாங்கும்
சிங்க ஏற்று உரி அரைக்கு அசைத்து உலகு தேர்ந்து அளந்து அவன் மேனி
அங்கம் யாவும் ஓர் கதை அதாய் கொண்டு அதன் அங்கியாய் புனை காழி
சங்க வார் குழைச் சட்டை நாயகன் துணைத் தாமரை சரண் போற்றி
புடைபட=பொருந்தும் வண்ணம்; படையுடை நெடு மதில்=படையாக திகழ்ந்த மதில்கள், மூன்று கோட்டைகள். வேறு எந்த படையும் தேவைப்படா வண்ணம் மூன்று பறக்கும் கோட்டைகளே படையாக திரிபுரத்தவர்களுக்கு அமைந்திருந்த நிலை படையுடை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுகின்றது. விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; பரமன்=அனைவர்க்கும் மேலானவன்; பரிசு=தன்மை;
பொழிப்புரை:
குகைகளில் சென்று அடையும் சிங்கத்தின் முகம் கொண்ட வடிவமெடுத்து இரணியனை கொன்ற திருமாலின் தோலையும், வேங்கைப் புலியின் தோலையும் தனது உடலில் பொருந்தும் வண்ணம் அணிந்து கொண்ட பெருமானே, வலிமையான பறக்கும் கோட்டைகளே தங்களுக்கு பெரிய படையாக இருக்கும் வண்ணம் வரம் பெற்றிருந்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளின் தன்மை அழியும் வண்ணம் செயல்பட்ட பெருமானே, இடபத்தின் சித்திரத்தை கொடியில் தாங்கிய வேதியனே, மற்ற தெய்வங்களிளிருந்து மாறுபட்டு விளங்கும் தன்மை உடையவனே, ஏனையிரிலும் மேலாக கருதப்படும் தேவர்கள் உனது திருவடிகளைத் தொழ, அவர்களுக்கு அருள் புரியும் வண்ணம் உமையம்மையுடன் நீ இருக்கும் கோலத்தை காட்சியாக அவர்களுக்கு அளிக்கின்றாய்.