புதுமைப்பித்தன் இலக்கியத் தடம் - தொகுப்பாசிரியர் ப.கிருஷ்ணசாமி; பக்.269; ரூ.280; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
க.நா.சு., மௌனியைத் தொடர்ந்து புதுமைப்பித்தன் இலக்கியத் தடத்தை காவ்யா 1995-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்புதான் இந்த நூல்.
புதுமைப்பித்தனின் கதைகள் குறித்து 40 ஆண்டுகளாக எழுதப்பட்டவைகளின் தொகுப்பு. அவரது சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் உள்ளிட்ட படைப்புகளில் காணப்படும் சிறப்புகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது. அவர் குறித்த அறிமுகம், அனுபவம், மதிப்பீடு என்று மூன்று தலைப்புகளில் 23 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தனின் அறிமுகத்தில் க.நா.சுப்ரமணியம், தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி, சாலிவாஹனன், ரா.ஸ்ரீ.தேசிகன், சுந்தர ராமசாமி, ராஜமார்த்தண்டன், அ.ராமசாமி, வாணீ
சரணன், எஸ்.சிதம்பரம் ஆகிய ஆளுமைகளின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் நீல.பத்மனாபன், ந.சிதம்பர சுப்ரமண்யன், செந்தூரம் கே.ஜெகதீஷ் ஆகியோர் புதுமைப்பித்தனின் படைப்புகளிலிருந்து கிடைத்த அனுபவத்தை விவரித்துள்ளனர். தி.க.சிவசங்கரன், வேதசகாயகுமார், அ.மார்க்ஸ், ரவிக்குமார், வே.மு.பொதிய வெற்பன், ஜெயமோகன், வெங்கட்சாமிநாதன் உள்ளிட்டோர் புதுமைப்பித்தனின் படைப்புகள் குறித்து மதிப்பீடு செய்துள்ளனர்.
நூலின் இறுதியில், கட்டுரையாசிரியர்களைப் பற்றி குறிப்புகள் நல்லதொரு முயற்சி. புதுமைப்பித்தனின் ஆளுமையைக் கண்டறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல் இது.