ஓடு சாந்தி ஓடு - சாந்தி சௌந்தர்ராஜன்; பக்.144; ரூ. 170; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி.) லிமிடெட்., சென்னை-127; ✆ 81480 66645.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓர் குக்கிராமத்தில் பிறந்த நூலாசிரியரின் பெற்றோர் செங்கல் சூளைத் தொழிலாளர்கள். வறுமையான சூழலில் வளர்ந்த சாந்தி, சிறுவயதிலேயே ஆண்கள் விளையாடும் விளையாட்டுகளையெல்லாம் விளையாடியிருக்கிறார்.
இவர் இந்தியாவுக்காக 2006-ஆம் ஆண்டில் கத்தாரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால், பாலியல் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.
சாந்தியை பாலியல் பரிசோதனை என்ற பெயரில் மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட பரிசோதனைகள், கேள்விகள் குறித்து படிக்கும்போது வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்றே தோன்றுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற ஓட்டப் பந்தய வீராங்கனையின் சுய சரிதையை மட்டுமல்ல; அன்றைய கிராமத்து வாழ்க்கையில் சில சமூக மக்கள் புறக்கணிக்கப்பட்டதன் வேதனைகளையும் நூலில் உணர முடிகிறது.
குழந்தைப் பருவம், அங்கீகாரம், சாதனைகள், வேதனைகள், பயிற்சியாளர் பணி, சட்டப் போராட்டம், முடிவற்ற வாழ்க்கை... என்று 16 அத்தியாயங்களைப் படிக்கும்போது, சாதனைகள் சோதனைகளைக் கடந்துதான் வெளிப்படும் என்பதை உணர்த்துகிறது இந்நூல். இவரது வெற்றியின் பின்னணியை அறிந்தால், கண்களில் ரத்தம்தான் வரும். அதுபோல், சாதித்தவர்தான் நூலாசிரியர். சாதிக்கத் துணிவோர் அவசியம் வாசிக்க வேண்டிய அட்டகாசமான நூல்.