மின்னற் பொழுதுகள் - கட்டுரைகள்- விட்டல்ராவ்; பக்.208; ரூ.180; பேசும் புதிய சக்தி, திருவாரூர்- 610 001; ✆ 94897 73671.
எழுத்தாளர், சினிமா விமர்சகர், புகைப்படக் கலைஞர், ஓவியர் என்று பன்முகங்களைக் கொண்டவர் விட்டல்ராவ். அவர் தனது ஐம்பதாண்டு எழுத்து அனுபவத்தில், தன்னுடன் தொடர்பில் இருந்த பலரைப் பற்றிய நினைவுகளைக் குறிப்பிட்டு, 'பேசும் சக்தி ' இதழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்.
ஓவியர் தேனுகா, சா.கந்தசாமி, அசோகமித்திரன், மா.அரங்கநாதன், தனுஷ்கோடி ராமசாமி, மகரிஷி, பாவண்ணன், கலைஞன் மாசிலாமணி, திலகவதி உள்ளிட்டோரை பற்றிய நூலாசிரியர் நினைவுகூர்ந்து எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. அவர்களைப் பற்றி சந்தோஷமான அரட்டைகளைப் பற்றி சொல்லாமல், தனித்திறன்கள், வரலாறு, சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்னைகளை அறியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
நீண்ட நாள் நட்பின் அடிப்படையில் எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு புதிய இதழ் தொடங்க, திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்தார். முன்னதாக, சாவி காஞ்சி காமாட்சியம்மனை தரிசித்துவிட்டு குங்குமம் கொண்டு வந்து கருணாநிதியிடம் வந்தார். 'புதுப் பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?' என்று கருணாநிதி கேட்டபோது, அவரது நெற்றியில் குங்குமத்தை வைக்க சாவி சென்றார். இதிலெல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லை என்ற கருணாநிதியிடம், 'மங்களகரமானது இது. புதுப் பத்திரிகையைத் தொடங்கப் போகிறோம். பெண்களுக்கு இன்றியமையாதது. பெண்கள்தான் இதுபோன்ற குடும்பப் பத்திரிகைகளைப் படிக்கிறாங்க. அதனால் குங்குமம் என்று பெயர் வைக்கலாம்' என்று குங்குமம் இதழ் பிறந்த கதையை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். இதுபோன்ற பலரும் அறியாத ஏராளமான ருசிகரத் தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.