மகாராஜாவின் பயணங்கள் - ஜகத்ஜித் சிங் (தமிழில் அக்களூர் இரவி); பக்.244; ரூ.275; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-42009603.
இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டோர் தங்களது அனுபவத்தை பதிவு செய்யவில்லை என்ற குறையை மகாராஜா ஜகத்ஜித் சிங் எழுதிய இந்த நூல் நிவர்த்தி செய்கிறது. அவர் நவீன கபுர்தலாவை (பஞ்சாப்) உருவாக்கியவர், விஷய ஞானம் பெற்றவர், சர்வதேச அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்... என்ற சிறப்புகளை உடையதால் தேர்ந்த எழுத்தாளரைப் போல பயண அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார்.
'காலனி ஆட்சியாளர்கள் அன்றைய சீன அரசாங்கம், மக்களின் விருப்பத்துக்கு எதிராகத்தான் ரயில் போக்குவரத்தை நிறுவினர். அவற்றை ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் நிர்வகித்தனர். ரயில் துரதிருஷ்டத்தை கொண்டு வரும் என சீனர்கள் நம்பினர். ஆனால் பழைமைவாதியான சீனாவின் டோவேஜர் பேரரசியும், அரசவை உறுப்பினர்களும் அவ்வப்போது ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினர்' என்று குறிப்பிடுகிறார்.
இதுபோன்று இலங்கை, சிங்கப்பூர், சீனா, ஜப்பான், ஹாங்காங், ஜாவா, இந்தோனேசியாவின் அன்றைய அரசியல் நிலவரம், மத நம்பிக்கை, புவியமைப்பு, வர்த்தகம், படைபலம், ராணுவ நகர்வு, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்களை பொருத்தமான புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.
மூன்று முறை உலகை வலம் வந்த மகாராஜாவின் பயண ஆர்வம், முதலாம் உலகப்போர் காலத்தில்கூட குறையவில்லை. வரலாறு, சுற்றுலா ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.