கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்படை - முனைவர் ம.திருமலை; பக்.280; ரூ.250; செல்லப்பா பதிப்பகம், மதுரை-1; ✆ 0452- 2345971.
சிறுபாணாற்றுப்படைக்கு 2007-இல் உரை எழுதியவுடன் நூலாசிரியருக்கு துணைவேந்தர் பொறுப்பு வந்தது. தனது பணி ஓய்வுக்குப் பின்னர் 2015-இல் பெரும்பாணாற்றுப்படையை ஆய்வுக்கு அவர் எடுத்துக்கொண்டார்.
பத்துப்பாட்டுள் ஆற்றுப்படையாக ஐந்தில் பெரும்பாணாற்றுப்படையும் ஒன்று. அதன் சிறப்பியல்புகளை விரிவாக எடுத்துரைக்கும்போது, தொண்டை மண்டலம் உருவான வரலாறும், தொண்டைமான் இளந்திரையன் வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இளந்திரையன் கடலில் வந்த குழந்தையா, தொண்டைக்கொடிகள் நிறைந்த ஆட்சிப் பகுதியை ஆட்சி செய்தவரா, கலிங்க மன்னர் இந்தப் பகுதியை ஆள்வதற்கு அனுப்பப்பட்டவரா என்ற மூன்று கருத்துகளை மூன்று அறிஞர்கள் வைக்கிறார்கள். இறுதியில் கரிகாலன் , அதியமான் போன்று மன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவன் என்கிற கணியன் பாலாவின் 'பழந்தமிழ் சமுதாயமும் வரலாறும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதை நூலாசிரியர் ஏற்கிறார். இதேபோன்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தவர் என்பதை அவரது பாடல்களில் இடம்பெறும் ஊர்கள், இடங்கள், வாழ்வியல்கள் பற்றிய செய்திகளின் மூலம் அறியலாம் என்கிறார் நூலாசிரியர். இளந்திரையன் தனது கொடைத்தன்மை வாயிலாக, உருத்திரங்கண்ணனார் மட்டுமின்றி பாணர்கள், கூத்தர்கள், புலவர்கள் வாழ்வு சிறந்து இருந்துள்ளமையும் உணர முடிகிறது.
அறிஞர்கள் பலரது கூற்றுகளையும் எடுத்து வைத்து தனது கருத்தையும் கூறியிருக்கும் நூலாசிரியர் இலக்கிய திறனாய்வின்படி பாடல்களின் பொருள்கூறுகளை ஆராய்ந்திருக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு ஏற்ற நூல்.