ஆ.மாதவன் நினைவலைகள் - நெல்லை சு.முத்து; பக்.448; ரூ.500; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 044- 2536 1039.
எழுத்தாளர் ஆ.மாதவன் தானே சுய சரிதையை எழுதினால் எப்படி தனித்துவம் பெற்றிருக்குமோ, அதுபோன்றே இந்த நூல் விளங்குகிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களிடம் கலந்தாலோசித்து, அவரது சீடரான நூலாசிரியர் இந்த நூலை எழுதியிருப்பதுதான் சிறப்பு.
'கேரளமும், தமிழ் எழுத்தாளர்களும்..' என்ற தொடக்கக் கட்டுரையைப் படிக்கும்போது, அவர்கள் தமிழுக்காக ஆற்றிய சிறப்புகள் வியக்க வைக்கின்றன. மாதவனின் பிறப்பு, படிப்பு, எழுத்து, இதழாசிரியர் அனுபவம், தமிழ்ச் சங்கப் பணிகள், கதைகள் எழுதுதல், இலக்கிய பயணம், துணைவியார் மரணம், ஒரே மகனின் அகால மரணம், விருதுகள் பெறுதல்... என்று 42 தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது, அவரது முழு வரலாற்றையும் அறியலாம். பெரிய இடர்களையெல்லாம் தாங்கி, எழுத்துலகில் சாதித்த அவரது நிலையைப் படிப்போரின் மனம் நொறுங்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்தந்த கட்டுரைகளுக்கு இடையே உரிய புகைப்படங்களைத் தேர்வு செய்து பதிவு செய்திருப்பது நூலுக்கு அழகூட்டுகிறது.
நதிநீர் பிரச்னை தொடர்பாக, 1981-இல் கேரள முதல்வர் ஈ.கே.நாயனாரை சந்திக்கச் சென்ற அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்த ஆ.மாதவன் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துக்கு கட்டட நிதியை கோரியதும், அதற்கு அவர் அளித்த நிதி குறித்த தகவல்கள் ருசிகரம்.
தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பை அளித்த மாதவனைப் பற்றி அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது.