பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் - முனைவர் ஆ.ராஜா; பக்.152; ரூ.160; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.
தொல்லியல், வரலாறு ஆய்வுகளில் இயங்கும் நூலாசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். பரந்துபட்ட தமிழகத்தின் தொன்மை சிறப்புகள் குறித்த செய்திகளை வெளிப்படுத்தும் நோக்கில், தனிப்பட்ட முறையில் பல்வேறு இடங்களில் நூலாசிரியரே நேரில் கள ஆய்வு செய்து அளித்த புதிய தகவல்களால் இந்த நூல் தனிச் சிறப்பைப் பெறுகிறது.
ஆலங்குடியில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றுப் படுகையில் நுண்கற்காலத் தடயங்கள்- அந்த ஊரில் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம், கொடுமணல்- கீழடி அகழாய்வுகள், பல்லவர் கால மூத்த தேவி சிற்பம், அளவியல் மரபில் மரக்கால், பெரியபட்டினத்தின் வரலாறு, கடல்சார் வரலாற்றின் தொன்மையான நங்கூரங்கள், சோமேசுவரர் கோயிலின் கலை, மரைக்காயர்களின் சிறப்புகள், சேதுபதி செப்பேடுகள் காட்டும் முத்துக்குளித்தல் போன்றவற்றின் வரலாற்று தகவல்களை நூலாசிரியர் தொகுத்தளித்திருப்பது தமிழ் ஆய்வாளர்களுக்கு அரிய பொக்கிஷம்.
நூல்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு விஷயங்களுக்கு கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோரின் நலனுக்காக, துணை நின்ற நூல்களின் முழு தகவல்களையும் நூலாசிரியர் தெரிவித்திருக்கிறார். பிற்சேர்க்கையில் பழந்தமிழர்களின் பெருமைகளை விளக்கும் கல்வெட்டுகள், கருவிகள், அணிகலன்கள், சிற்பங்கள், நாள்தோறும் பயன்பாட்டிலிருந்த பொருள்கள் குறித்த புகைப்படங்கள் வியக்க வைக்கின்றன.
தமிழ் இலக்கியம், வரலாற்று மாணவர்கள் படித்தறிய வேண்டிய பல்வேறு தகவல்கள் கொண்ட களஞ்சியம்.