வெண்விழி ஆதிரை - வில்லரசன்; பக்.152; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.
நூலாசிரியர் வில்லரசனின் நூலில் வேங்கைமார்பன். பாண்டியர் வரலாற்று நாவலாக அது அமைந்தது. அடுத்து சோழர்களது நாவலாக வெண்விழி ஆதிரை உருப்பெற்றுள்ளது. நீலகண்ட சாஸ்திரியின் நூலில், திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயக் கல்வெட்டில் இடம்பெற்ற இருவரிகள்தான் நாவலுக்கான கரு. பார்வையற்ற வெண்விழி ஆதிரை, காதலன் சேயோன் வாழ்வில் நடைபெறுவதுதான் இந்தக் கதையின் முதல் பாதி. சமூக நாவல் பாணியில் அமைந்துள்ளது. சரித்திர நாவலாக மாறுவது இளவரசர் பராந்தக சோழன் இடம்பெறுவதிலிருந்துதான். பராந்தகனின் கோபம், ஆதிரையின் வினா.. என்று நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது.
நூலில் உரைநடையிலான பேச்சு வசனங்களைப் படிக்கும்போது, நேரடியாக காட்சியைப் பார்ப்பதுபோன்ற பிரமிப்பு ஏற்படுகிறது.
சோழ மன்னர்கள் வீரத்தில் சேவல்கள், கொடையில் வள்ளல்கள், அறத்தின் காவலர்கள் என்பதை நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. தமிழுக்கும் சைவத்துக்கும் சோழ மன்னர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பும் நூலில் நயம் படக் கூறப்பட்டுள்ளது.
தமிழர்களின் வீரம், காதல் போன்றவை படிக்கும்போது சுவாரசியமாக இருப்பதோடு, வரலாற்றில் அடைந்துள்ள முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது. நாவலாக அல்லாமல், வரலாற்றையும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் நூலாகவும் இது அமைந்துள்ளது.