நிழலைத் துரத்துகிறவன் - க.முத்துக்கிருஷ்ணன்; பக்.200; ரூ.200; சந்தியா பதிப்பகம், சென்னை - 83; 044-24896979.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பரிசு நூல் தேர்வுக் குழுவில் ஜூரியாக செயல்பட்டவருமான க.முத்துக்கிருஷ்ணனின் 7-ஆவது நாவல் இது.
தவறு செய்யும் அனைவருமே தெரிந்தேதான் செய்கிறார்கள். யாரும் இங்கே ஞானி இல்லை. ஆணும், பெண்ணும் உணர்வுகளுக்குள் ஊசலாடும் மானிட ஜென்மங்கள் என்பதுதான் இந்நாவலின் மையக்கரு.
சந்தர்ப்பச் சூழலால் தனது காதலன் சரவணனை கைவிட்டு வேறொருவரை மணம்முடிக்கும் ரமாவுக்கு தாம்பத்ய உறவு ஏமாற்றத்தைத் தருகிறது. ரமாவுக்கு திருமணமான பிறகும் அவளை மறக்க முடியாமலும், திருமணம் செய்துகொள்ளாமலும் சரவணன் அவதியுறுகிறான்.
இவர்கள் இருவருக்குமான மனப்போராட்டங்கள், அவர்களுக்கிடையே நிகழும் நகைச்சுவையான உரையாடல்கள் மூலம் வெளிப்படுகிறது.
ரமாவுக்கும், சரவணனுக்கும் இடையே உணர்ச்சியின் எழுச்சியில் உருவாகும் உறவையும், உறவின் முறிவையும் பந்தாடுகிறது காலம். கடந்தகால நினைவும், நிகழ்காலச் சுமையினால் ஏற்படும் தற்காலிக மறதியும் எதிரும் புதிருமாக இருவருடைய வாழ்விலும் நின்றாடுகிறது.
உண்மையும் பொய்யும் கலந்த நிழல் வாழ்வை சரவணனும் ரமாவும் மட்டுமல்ல; மனிதர்கள் ஒவ்வொருவருமே துரத்துகின்றனர். நாவல் வாசகர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும்.