ஒப்பிலாக்குறளில் ஒப்புமைப் பகுதிகள்; வே.மகாதேவன்; பக். 300, ரூ.500, இந்திய கலாசாரம் மற்றும் இந்தியவியலாய்வு மையம், சென்னை-44; 7889072478.
திருக்குறள் ஒரு பெருங்கடல். அந்த அறிவுக் கடலில் மூழ்கி ஏராளமான அறிஞர் பெருமக்கள் நல்முத்துகளை நூல்களாக ஆக்கியுள்ளனர். அந்த வகையில், திருக்குறளுக்குள்ளேயே உள்ள ஒப்புமைப் பகுதிகளை ஆராய்ந்து தொகுத்துள்ளார் நூலாசிரியர். திருக்குறளில் இடம்பெறும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஒப்புமைகளும், 600-க்கும் மேற்பட்ட குறட்பாக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
உதாரணத்துக்கு எது அறம் என்ற தலைப்பில் 'அறம் எனப்படுவது யாது என்பதை மூன்று குறட்பாக்களில் விளக்குவார் வள்ளுவர். இவற்றுள் இரண்டு அறன் வலியுறுத்தலிலும், மற்றொன்று இனியவை கூறலிலும் உள்ளவையாகும்' எனக் கூறி, அந்தக் குறள்களையும், அவற்றின் பொருளையும் விளக்கிக் கூறுகிறார்.
'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற' என்ற குறளுக்கு மனத்தில் அழுக்கிருக்க அதன் வழியாகச் செய்யப்பெறும் செயல்கள் பயனற்றவை என்கிற எளிமையான விளக்கத்தையும் அளிக்கிறார்.
ஒன்றைப் பிறிதொன்றுடன் ஒப்பிட்டு எழுதுவதே ஒப்பிலக்கியம். ஆனால், திருக்குறள் வெண்பாக்களை திருக்குறள் வெண்பாக்களுடன் ஒப்பிட்டிருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு. இவற்றுடன் சங்க நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ள கருத்துகளை மேற்கோள்காட்டியிருப்பது நூலுக்கு அணிகலனாகத் திகழ்கிறது.
நூலின் கடைசிப் பகுதியில், நூலில் இடம்பெற்றுள்ள குறட்பாக்களின் முதற்குறிப்பும், பக்க எண்ணும் அகர வரிசையில் குறிப்பிடப்பட்டிருப்பது நூலின் பகுதிகளை தங்கள் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுத்து படிப்பதற்கு உதவி செய்கிறது. திருக்குறள் அன்பர்கள் வாசித்து பயன்பெறுவதற்கு உரிய நூல்.