தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005-ம் பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும் -வடகரை செல்வராஜ்; பக்.648; ரூ.550; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; ✆044-29999611.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-இல் மத்திய அரசு கொண்டு வந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சிறப்பான திட்டம். அரசுத் திட்டங்கள், மக்கள் நலப் பணிகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தில், ஆயிரக்கணக்கான ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சாதாரண குடிமகன் கூட குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்பட கேள்விகளை எழுப்பி தகவல்களைப் பெற முடியும். அதுவும் தபால் செலவும், பத்து ரூபாய் கட்டணத்தில்தான்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் தகவல்களைப் பெறுவது எப்படி, விண்ணப்பிப்பது எப்படி, சந்தேகங்கள், தகவல்களைத் தர மறுத்தால் மேல்முறையீடு செய்வது எப்படி என்பவற்றுடன் முக்கிய தீர்ப்புரைகள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது, கட்டண விலக்கு பெறுதல் என்பது உள்பட சட்டம் குறித்து முழுமையான கையேடாக இந்த நூல் விளங்குகிறது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் தகவல் பெற விண்ணப்பிக்க இருக்கும் பொது தகவல் அலுவலர்களின் முகவரிகளிலும் இந்த நூலில் இருப்பது சிறப்பு.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவான வரலாறு என்ற கட்டுரையில், சட்டம் உருவாக காரணமாக இருந்த சம்பவங்கள், நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவோரும், ஊழல்- முறைகேடுகள் நடைபெறுவதைத் தட்டிக் கேட்கத் துணிவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.