மரங்களின் வரம் - பா.இராதாகிருஷ்ணன்; பக்.280; ரூ.400; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆044-2536 1039.
தினமணி சிறுவர் மணியில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. மரம் வளர்த்தலால் என்ன பயன் என்று தொடங்கும் கட்டுரை, இன்றைய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் மரம் வளர்த்தலின் அவசியத்தை மக்களுக்கு உணரவைக்கிறது. மரங்கள் நாட்டின் வளங்கள் என்கிறார் நூலாசிரியர்.
மரமே நேரடியாகப் பேசுவதுபோலவும், தன் அறிவியல் பெயர், குடும்பப் பெயர், எந்தக் கோயிலில் தல விருட்சம், நட்சத்திரப் பெயர், ராசி, தமிழாண்டு, வேர் முதல் இலை வரை மனிதக் குலத்துக்கு வழங்கும் பலன்கள், மருத்துவக் குணங்கள், பொன்மொழிகள், நிறை-குறைகள் முதலியவற்றை அந்த மரத்தின் வழியாக எளிய நடையில் நூலாசிரியர் கூறியிருப்பதுதான் நூலின் சிறப்பு.
சுமார் 175 மரங்களின் வரலாற்றை எளிய நடையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரையில், புரியும் வண்ணம் எழுதியிருப்பது சிறப்பு. நம் கண் முன்னே நிற்கும் மரங்கள் பலவற்றை அறிவதோடு, வனங்களில் மட்டுமே இருக்கும் மரங்களைப் பற்றியும் தெரிகிறது. அந்தந்த மரங்களின் புகைப்படங்களையும் கட்டுரையில் சேர்த்திருப்பது பாராட்டத்தக்கது.
இந்த நூலைப் படிக்கும்போதே நமது உடல் உபாதைக்கு தொடர்புடைய மருத்துவக் குணம் கொண்ட மரங்களைப் பற்றிய சிந்தனையே மேலோங்குகிறது. மரம் வளர்க்க வேண்டிய ஆவலும் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தாவரவியல் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் இது.