நூல் அரங்கம்

திருவாசகம்

6th Feb 2023 01:11 PM

ADVERTISEMENT

திருவாசகம் (இரு பகுதிகள்)- ஈ. சுந்தரமாணிக்க யோகீஸ்வரர்; முதல் பகுதி - பக்.500; ரூ.550- இரண்டாம் பகுதி பக். 548; ரூ.600; சங்கர் பதிப்பகம், சென்னை -49; 044 - 2650 2086 .
 மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், உள்ளத்தை உருக்கும் தன்மை மிக்க பக்திப் பாடல்கள் கொண்ட நூல். சைவ சமயத்தின் கருவூலமாகப் போற்றப்படும் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக இந்நூல் இடம்பெற்றுள்ளது.
 திருவாசகத்துக்குப் பலரும் உரையெழுதியிருந்தாலும், நூலாசிரியர் உண்மை ஞான விளக்க உரையாக எழுதியுள்ளார். இந்த முறை பிறருடைய உரைகளிலிருந்து மாறுபட்டுள்ளது.
 எடுத்துக்காட்டாக, திருவாசகத்தின் தொடக்கமான "சிவபுராண'த்தில் இடம்பெறும் "கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க' என்ற வரிக்கு, "கோகழி' என்னும் சொல், திருப்பெருந்துறையைக் குறிப்பதாகச் சிலரும், திருவாவடுதுறையைக் குறிப்பதாகச் சிலரும் கூறியுள்ளனர். ஆனால், இந்நூலாசிரியர் "கோகழி என்கிற சொல்லில் தண்டமும் சக்கரமும் அடங்கியுள்ளன' என்றும், "சக்கரம் திருவடிகளாகவும், தண்டம் விரல்களாகவும் பொருந்தியிருக்கின்றன' என்றும் கூறுகிறார்.
 அதுபோலவே, "அச்சோப் பதிக'த்தில் வரும் "முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை' என்னும் வரியில் உள்ள "முத்திநெறி அறியாத' என்பதற்கு "முத்தி பெறுவதற்கான வழியை அறியாமல் இருக்கும்' என்று பலரும் பொருள் கூறியிருக்க, இந்நூலாசிரியர், "மூன்று தீயையே முத்தி என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்' என்று குறிப்பிடுகிறார்.
 நூலாசிரியர், திருவாசக உரைக்கு மேற்கோள்களாக தாயுமானவர், காளமேகப் புலவர் போன்ற பலருடைய பாடல்களைக் குறிப்பிட்டிருந்தாலும், திருவாசகத்துக்கு நிகராக அதிகப் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டிருப்பது திருமூலரின் "திருமந்திர'த்திலிருந்துதான். அதனால், திருவாசகக் கருத்துகளுடன் திருமந்திரக் கருத்துகளையும் நம்மால் அறிய முடிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT