ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் மகாத்மியம் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.160; ரூ.150; ப்ரெய்ன் பேங்க், சென்னை -17; 9841036446.
தொழிலதிபர் மட்டுமின்றி, சிறந்த எழுத்தாளருமான நூலாசிரியர் எழுதியுள்ள ஆன்மிக நூல்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சித்தர்கள் என்றும் வாழ்கிற புண்ணிய பூமி. ஆன்மிகத் தலமான இங்கு ஆன்மிகப் பெரியோர் பலர் வாழ்ந்துள்ளனர். இவர்களில் முக்கியமானவர் சேஷாத்ரி ஸ்வாமிகள்.
புனிதர் சரிதம் வரிசையில் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு ஜனனம் முதல் ஜீவசமாதி வரை அழகு தமிழில் விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது. சேஷாத்ரி குழந்தையாக இருந்தபோது, ஒரு பொம்மை வியாபாரியின் கூடையில் இருந்து ஆசையாக கிருஷ்ணர் பொம்மை ஒன்றை எடுத்துக் கொண்டார்.
அன்றைக்கு வியாபாரிக்கு அதிருஷ்டம். சீக்கிரமே அந்தக் கூடையில் இருந்த அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. அதனால், 'தங்கக் கை' சேஷாத்ரி என்றும் 'தெய்வக் குழந்தை' என்றும் சேஷாத்ரியின் புகழ் ஊரெங்கும் பரவியது. குழந்தை சேஷாத்ரி, அந்த கிருஷ்ணர் பொம்மைக்கு தினம் பூச்சூடி, பூஜைகள் செய்து வந்தார். அந்த கிருஷ்ணர் பொம்மை இப்போதும் சேஷாத்ரியின் தம்பி நரசிம்ம ஜோஸ்யர் வீட்டில் இருக்கிறது.
அனிமா, மகிமா, இலகிமா, அரிமா, பிராப்தி, வசித்துவம், பரகாம்யம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை சேஷாத்ரி ஸ்வாமிகள் பெற்றிருந்தார். எதிர்ப்புகளை மீறி, மயானத்தில் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.
அவரால் ஒரே நேரத்தில் பல இடங்களில் சஞ்சரிக்க முடிந்தது. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் வழக்கத்தை பக்தர்களிடையே உருவாக்கியவர். ரமண பகவானைவிட பத்து வயது மூத்தவர். சேஷாத்ரி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு, பல அரிய ஆன்மிக தகவல்களை அறிந்துகொள்ள உதவும் நூல்!