கிராம ஊராட்சி நிர்வாகம் (ஏ டூ இசட்) - வடகரை செல்வராஜ்; பக்.744; ரூ.650; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; 044-29999611.
'அடித்தளத்திலிருந்து கட்டமைப்பதே மிகச்சிறந்த வளர்ச்சியை அளிக்கும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற குடியரசாக மாற வேண்டும். அதற்கு கூட்டாண்மை சார்ந்த
அறிவுபூர்வமான பணி தேவையாகும்' என்றார் மகாத்மா காந்தி. இன்று நாட்டில் பெரும்பான்மையானோர் ஊரகப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். அவர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்த ஊரக வளர்ச்சித் துறையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.
ஊராட்சி நிர்வாகத்தைப் பற்றி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கிராம மக்களும் அறிய வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. இதற்கேற்றவாறு, ஊராட்சி
நிர்வாகத்தில் இடஒதுக்கீடு, செயல்பாடுகள், கடமைகள், அதிகாரங்கள், பொறுப்புகள், வரவு- செலவுப் பணிகள், பதிவேடுகள் பராமரித்தல், நிர்வாகப் பணிகள், சொத்துகளைப் பராமரித்தல், விருது பெறுவது எப்படி... என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
ஊராட்சிப் பணியாளர்களின் கடமைகள், பொறுப்புகள், ஊராட்சித் தலைவர்கள் பதவி விலகல், நீக்கம் போன்ற தகவல்களும் உள்ளன.
இதுதவிர, மத்திய, மாநில அரசுத் திட்டங்கள், மானியங்கள், விருதுகள் குறித்தும், அவற்றைப் பெறுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு திட்டங்களில் இருந்து நிதியுதவியை எப்படி பெறுவது, மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வது குறித்த தகவல்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழிகாட்டியாகவே இருக்கும்.
கிராம மக்களும் ஊராட்சி நிர்வாகத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல் இது.